சுவிஸ், பிரான்ஸில் இலங்கையர்கள் இருவர் உயிரிழப்பு

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிட்சர்லாந்து, பிரான்ஸில் 2 இலங்கையர்கள் உயிரிழப்பு

by Staff Writer 26-03-2020 | 6:56 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து குறித்த நாடுகளில் வசித்து வந்தவர்களாவர். சுவிட்ஸர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் சூரிச் சென்று வந்திருந்த நிலையில், கொரோனாவிற்கான ஆரம்ப அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் மகள் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். இதேவேளை, பிரான்ஸில் வசித்து வந்த யாழ்ப்பாணம் - தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதான ஒருவரும் நோய் அறிகுறியுடன் உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரின் மரணங்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. பிரான்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்திருந்ததாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறினார். சுவிட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டாலும், மரணத்திற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.