by Staff Writer 26-03-2020 | 6:06 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி சேவை மற்றும் திறைசேரி ஆகியன அத்தியாவசிய சேவை பட்டியலுக்குள் இணைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ், பொருட்களை விநியோகித்தல், சுங்க நடவடிக்கைகள், மின்சாரம், நீர், எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளும் அத்தியாவசிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த துறைகள் செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஊரடங்கு காலப்பகுதியில் இந்த நிறுவனங்களை திறக்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர , மத்திய வங்கியின் ஆளுநருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் தினமும் 02 மணித்தியாலங்கள் தபால் நிலையங்களை திறப்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் அரச வைத்தியசாலைகளில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துப் பொருட்களை வீட்டிற்கே விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.