கொரோனா தொற்று சந்தேகத்தில் 4 வயது குழந்தை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 26-03-2020 | 7:30 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 4 வயது குழந்தை ஒன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதேவேளை, யாழ். தாவடி பகுதி இன்றும் முடக்கப்பட்டுள்ளது. கிராம சேவையாளரின் அலுவலகம் தாவடி சந்தியில் இயங்கி வருவதுடன், நாளாந்த செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சதொச மற்றும் சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியன இணைந்து உணவுப் பொருட்களை வீடு வீடாக விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதேவேளை, யாழ். அரியாலையில் சுவிஸ் போதகரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்துகொண்ட திருகோணமலையை சேர்ந்த போதகரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை - உப்புவௌி, பள்ளத்தோட்டம் பகுதியில் குறித்த போதகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வி.பிரேமாநந்தன் தெரிவித்தார். போதகருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்தில் இருந்து வருகை தந்த போதகரால் கடந்த 15 ஆம் திகதி யாழ். அரியாலையில் ஆராதனை நடத்திய மத போதகரை சந்தித்த அரியாலையை சேர்ந்த ஒருவரும் கொரோனாவால் பீடிக்கப்பட்டுள்ளார்.