சம்பளத்திற்கும் சுகாதாரத்திற்குமான போராட்டம் 

சம்பளத்திற்கும் சுகாதாரத்திற்கும் போராட வேண்டிய நிலையில் தோட்டத்தொழிலாளர்கள்

by Staff Writer 24-03-2020 | 8:27 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கொரோனாவை எதிர்கொள்வதற்கான எவ்வித தயார்படுத்தல்களும் இன்றி இன்று தொழிலுக்கு சென்றதை அவதானிக்க முடிந்தது. ஊரடங்கு சட்டத்தினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பல நாட்களின் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று கடமைக்கு சென்றனர். கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து தற்காத்துக்கொள்ளும் நோக்கில் சகலரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளனவா? தமக்கு முகக்கவசம் வழங்கப்படவில்லை எனவும் தொடர்புடைய தரப்பினர் தங்களையும் கவனிக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்தனர். மேலும், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் 18 கிலோ தேயிலையினை பறிக்குமாறு தம்மை நிர்வாகம் வலியுறுத்துவதாக பெருந்தோட்டத்துறை பாட்டாளி மக்கள் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் 50 ரூபா கொடுக்கப்படவில்லை. நிவாரணம் கொடுக்கப்படவில்லை. சம்பளத்திற்கும் சுகாதாரத்திற்கும் போராட வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. நகரத்திற்கு கொடுக்கப்படும் சலுகை எமக்கும் கொடுக்கப்பட வேண்டும்
என பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் குறிப்பிட்டார்.