மக்களுக்கு மானிய விலையில் உணவுப்பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை

by Staff Writer 23-03-2020 | 8:21 PM
Colombo (News 1st) அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொருட்களை பொதியிடும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த மானிய உணவுப் பொதியில் 6 உணவுப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கொழும்பு கூட்டுறவு மொத்த விற்பனை களஞ்சிய கட்டடத் தொகுதியில் பொதியிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதியை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி துஷார திசாநாயக்க குறிப்பிட்டார். இதேவேளை, வெலிசர சிவில் பாதுகாப்பு படை முகாமில் உலர் உணவுப்பொருட்கள் பொதியிடப்பட்டன. அவற்றை நாளை காலை முதல் மானிய விலையில் வீடுகளுக்கே சென்று படையினர் விநியோகிக்கவுள்ளதாக சிவில் பாதுகாப்புப் படையணியின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் குறிப்பிட்டார்.