இத்தாலி சென்றுள்ள கியூப மருத்துவக் குழு

கொரோனா சிகிச்சைக்காக இத்தாலி சென்றுள்ள கியூப மருத்துவக் குழு

by Bella Dalima 23-03-2020 | 3:33 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கியூப மருத்துவக் குழுவினர் இத்தாலிக்கு சென்றுள்ளனர். இத்தாலியில் மிகவும் பாதிக்கப்பட்ட பிராந்தியமான லம்பார்டியினால் (Lombardy) விடுக்கப்பட்ட கோரிக்கையினையடுத்து, குறித்த குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் குழுவில் வைத்தியர்கள், தாதியர்கள் இடம்பெற்றுள்ளனர். கொரோனாவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் நேற்றைய தினத்தில் 651 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, இத்தாலியில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,476 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் பதிவாகிய மரணமானது நாளொன்றில் பதிவாகிய இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக அமைந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ,138 ஆக உயர்வடைந்துள்ளது. இத்தாலி அனுபவித்து வரும் துயரங்களிலிருந்து உலகின் ஏனைய நாடுகள் பாடம் கற்றுக்கொள்ளும் என தாம் நம்புவதாக அந்நாட்டு ஜனாதிபதி சேர்ஜியோ மட்டரெல்லா (Sergio Mattarella) தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள மக்கள் புரிந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.