வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீடிப்பு

வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி வரை நீடிப்பு

by Staff Writer 22-03-2020 | 4:43 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வடக்கின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களில் 24 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் அன்றைய தினம் நண்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் வாழும் மக்கள் தாம் வாழும் மாவட்டங்களில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு பயணிக்க முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சுவிட்சர்லாந்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த மத போதகர் ஒருவர் யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் ஆராதனை நிகழ்வில் ஈடுபட்டிருந்தார். குறித்த போதகருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சுவிட்சர்லாந்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டு, போதகருடன் தொடர்பில் இருந்த 40 வயதான நபருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. மற்றுமொருவரும் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஆராதனையில் கலந்துகொண்ட ஏனையவர்களை அடையாளம் காணும் நோக்கில் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு , புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும், அன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து மீண்டும் குறித்த மூன்று மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.