உயிர்த்தெழும் இயற்கை

உயிர்த்தெழும் இயற்கை: நகரங்களில் மீண்டும் ஒலியெழுப்பும் பறவைகள்

by Bella Dalima 22-03-2020 | 10:24 PM
Colombo (News 1st) நம் நாட்டினரும் உலக நாடுகளில் உள்ளவர்களும் முன்னொருபோதும் எதிர்கொள்ளாத ஒரு பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். வாழ்வியல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்கின்றோம். எம்மைச் சுற்றி நாங்கள் அவதானித்தால், இயற்கை மீண்டும் எவ்வாறு உயிர்த்தெழுகின்றது என்பதை எம்மால் அறிந்துகொள்ள முடியும். உலகளாவிய ரீதியிலுள்ள நகரங்களில் மீண்டும் பறவைகள் ஒலியெழுப்பி இசைக்கத் தொடங்கியுள்ளன. சனநெரிசல் அதிகரித்துக் காணப்பட்ட பகுதிகளில் பல தசாப்தங்களாக காணத் தவறிய பட்சிகளையும் மிருகங்களையும் இன்று மீண்டும் காணக்கூடியதாக உள்ளது. கடந்த காலங்களில் இயற்கையின் பேரழிவுகளை தொடர்ச்சியாக நாம் அவதானித்து வந்தோம். அவற்றில் பல அரசியல் தொடர்புடையனவாய் இருந்தன. எமது காட்டு யானைகள் எதிர்நோக்கிய பாதிப்புகளை நாம் கண்ணுற்றோம். எமது சிறுத்தைகள் எதிர்நோக்கிய பாதிப்புகளையும் காணக்கூடியதாய் இருந்தது. எமது தேசத்தின் ஆறுகள் , நீரோடைகள், அழகிய வனாந்தரங்கள் எதிர்நோக்கிய பாதிப்புகளை நாங்கள் கண்டோம். எமது தேசத்தைப் பாதுகாப்பார்கள் என நாங்கள் நம்பியவர்கள் இவையெதனையும் விட்டுவைக்கவில்லை. இன்று பல பின்தங்கிய கிராமங்கள் மனித - யானை மோதலை எதிர்நோக்கியுள்ளன. பல ஆயிரம் வருடங்களாக எம்முடன் ஒன்றிணைந்து பயணித்த விலங்கு, இன்று மனிதனின் பாரிய எதிரியாக மாற்றம் பெற்றுள்ளது. ஏனெனில் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து நாம் அவற்றை விரட்டியுள்ளோம். அபிவிருத்தி என்ற பெயரில் அவற்றின் வாழ்விடங்களை நாம் கபளீகரம் செய்து விட்டோம். எமது குடும்பங்கள் மற்றும் எம்மை இந்த வைரஸில் இருந்து பாதுகாக்கின்ற நோக்கில், இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும். எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பதற்கு இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும். நாங்கள் வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரியம் மிக்க ஓர் தேசத்தின் மக்கள். எமது மூதாதையர்களின் வழித்தடத்தில் ஆழப்பதிந்த கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் நாங்கள். நாங்கள் பாரியதோர் மோசமான நிலைக்குள் வீழ்ந்துள்ளோம். எனினும், நிச்சயமாக மீண்டெழுவோம். ஆனால், இவையனைத்தையும் எம்மிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். எமது குறுகிய எண்ணங்களை கைவிடுவதிலிருந்தே இவை ஒவ்வொன்றும் ஆரம்பிக்கின்றன. ஒன்றிணைந்த இலங்கையராகவே நாங்கள் இதனை கடந்து செல்ல வேண்டும். நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பில் கொரோனா வைரஸ் கருத்திற்கொள்வதில்லை. நீங்கள் பின்பற்றும் மதம் தொடர்பிலும் அது கவனத்திற்கொள்ளாது. வைரஸ் தாக்கத்தின்போது நீங்கள் மனிதன் என்பது மாத்திரமே கருத்திற்கொள்ளப்படும். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம். ஒன்றிணைந்து போராடி தேசத்தை முன்நகர்த்த வேண்டும். நிச்சயம் நாம் அதனைச் செய்வோம்!