வழக்கு விசாரணைகள் தொடர்பில் விசேட சுற்றுநிரூபம்  

வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் முறை தொடர்பில் விசேட சுற்றுநிரூபம் வௌியீடு

by Staff Writer 20-03-2020 | 3:28 PM
Colombo (News 1st) இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் முறை தொடர்பிலான விதிமுறைகள் அடங்கிய விசேட சுற்றுநிரூபம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க வர்த்தக மேல் நீதிமன்றம், மேல் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றங்களில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்காக இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. அவசர மற்றும் அத்தியாவசியமானது என நீதிபதியால் தீர்மானிக்கப்படும் வழக்குகள் தவிர்ந்த, ஏனைய வழக்குகளை பகிரங்க நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிணை மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகளை மாத்திரம் வழமை போல முன்னெடுக்குமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக அவசர தேவைக்காக வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என சட்டத்தரணிகள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் , காலை 10 மணிக்கு முன்னர் அது தொடர்பான நகர்த்தல் பத்திரத்தை சமர்ப்பித்தால் மாத்திரமே பரிசீலனை முன்னெடுக்கப்பட வேண்டும் என நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விளக்கமறியல் உத்தரவை நீடிப்பதற்கு அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லாது, வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னிலைப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயலுமானவரை பொலிஸ் பிணை வழங்கக்கூடிய சாத்தியப்பாடுகள் தொடர்பில் செயற்படுமாறும் அது குறித்து அந்தந்த பகுதிகளுக்கு பொறுப்பான நீதவான்கள் பொலிஸாருடன் இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.