by Bella Dalima 20-03-2020 | 5:03 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரானா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளன.
அத்துடன், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாகவும் உள்நாட்டில் புதிதாக எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லையென சீனா அறிவித்துள்ளது.
பிரேஸிலில் ஆரம்பமாகின்ற குளிர்காலம் கொரோனா வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்குமென மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரேஸிலில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அங்கு ஆரம்பமாகும் குளிர் காலநிலை நிலைமையை மேலும் மோசமடையச் செய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற மருத்துவ சேவையாளர்கள் 65,000 பேரை மீண்டும் சேவையில் இணையுமாறு பிரித்தானிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து வைத்தியசாலைகளிலும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் செயற்கை சுவாசம் வழங்கும் கருவிகள் போதியளவில் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
பிரித்தானியாவில் 144 கொரோனா நோயாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 3269 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தில் பொதுமக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்வரும் ஜூன் மாதத்தில் இடம்பெறவிருந்த G 7 மாநாட்டை இரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
தென் கொரியாவில் மேலும் 87 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8,652 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கொரொனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தென் கொரியா, சீனா மற்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் video conferencing மூலம் கலந்துரையாடியுள்ளனர்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான திட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தென் கொரியாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் ரூபி பிரின்சஸ் பயணிகள் கப்பலில் மூவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2700 பயணிகள் சிட்னியில் வௌியேற்றப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவைக் காட்டிலும் இத்தாலியில் உயர்வடைந்துள்ளது.
இத்தாலியில் இதுவரை 3,405 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸின் கேந்திரமாகக் காணப்பட்ட சீனாவில் 3,245 பேர் உயிரிழந்துள்ளர்.
கடந்த 12 ஆம் திகதி இத்தாலி முடக்கப்பட்டதுடன், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173-ஆக உயர்ந்துள்ளதுடன், இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.