கொரோனா ; இத்தாலியில் 24 மணி நேரத்தில் 475 பேர் பலி

கொரோனாவின் தாண்டவம் ; இத்தாலியில் 24 மணி நேரத்தில் 475 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 19-03-2020 | 7:47 AM
Colombo (News 1st) இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 475 ஆல் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3000 அக அதிகரித்துள்ளது. 35,713 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 4000 பேர் குணமடைந்துள்ளனர். லொம்பாடி பிராந்தியம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு ஒரேநாளில் 319 பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளதுடன், தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,626 ஆக உயர்வடைந்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. சீனாவில் 8,758 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். உலகளாவிய ரீதியில் தொற்றுக்குள்ளாகியுள்ள 2 இலட்சம் பேரில் 80 வீதமானவர்கள் ஐரோப்பா, ஆசியா மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அயர்லாந்தில் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 74 ஆல் அதிகரித்துள்ளதுடன் 366 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் 15,000 பேர் வரையில் தொற்றுக்குள்ளாவர் என அயர்லாந்து பிரதமர் Leo Varadkar தெரிவித்துள்ளார். அயர்லாந்தில் களியாட்ட விடுதிகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு சிறப்பு உரை ஆற்றவுள்ளார். இதனிடையே, இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய சவால் கொரோனா வைரஸ் என ஜெர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார்.