பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதிக் கட்டத்தில்

by Staff Writer 18-03-2020 | 9:13 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி இன்று யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது. கூட்டணியின் தலைவர் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இன்று முற்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இம்முறை தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வேட்புமனுவை கையளித்தார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இன்று யாழ்ப்பாணத்தில் ​வேட்புமனு தாக்கல் செய்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் வேட்புமனுவை கையளித்தார். இதேவேளை, தேசிய மக்கள் சக்தியும் இம்முறை யாழ்ப்பாணத்தில் போட்டியிடவுள்ளது. யாழ். மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடும் முருகேசு சந்திரகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதேவேளை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் 8 பேர் அடங்கலாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இம்முறை தேர்தலில் களமிறங்கவுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள நிலையில், இன்று வேட்புமனுவை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கல் செய்தார். இதேவேளை, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் இன்று வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முதன்மை வேட்பாளரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவருமான பிரபா கணேசன் இன்று வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஏனைய செய்திகள்