கொரோனா பாதிப்புள்ள நாடுகள் எடுத்துள்ள தீர்மானங்கள்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் எடுத்துள்ள தீர்மானங்கள்

by Bella Dalima 18-03-2020 | 8:08 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையை பகுதியளவில் மூடுவதற்கு கனடாவும் அமெரிக்காவும் இணக்கம் கண்டுள்ளன. அதன்படி, அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த பயணங்களை அந்நாட்டு மக்கள் மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவின் 37 பிராந்தியங்களில் அரசாங்க பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 10 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒரு இடத்தில் ஒன்று கூட வேண்டாம் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொலிவியா தமது எல்லைகளை மூடியுள்ளது. பிரேஸிலில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், அவசர நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், அதன்படி நகரங்களை மூடுவதற்கும் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கவும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாகக் கூறியுள்ளார். எவரும் நாட்டில் இருந்து வெளியேறக் கூடாது என அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 245 ஆக அதிகரித்துள்ளதுடன், மக்கள் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.