by Staff Writer 18-03-2020 | 8:38 AM
Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தில் சாகாமம், வம்மியடி குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளக்கூடிய 2,930 ஏக்கர் வயல் நிலம் அடையாளங்காணப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இம்மாதம் 20 ஆம் திகதி விதைப்பு நடவடிக்கையை ஆரம்பித்து ஏப்ரல் 10ஆம் திகதியுடன் நிறைவுசெய்ய வேண்டுமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் அறிவுறுத்தியுள்ளார்.
சிறுபோகத்திற்கான முதலாவது நீர்விநியோகம் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் இறுதி நீர்விநியோகம் ஜூன் மாதம் 20ஆம் திகதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தொடக்கம் மூன்றரை மாத நெல்லினங்களை விதைக்குமாறும் விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் அனைவருக்கும் மானிய அடிப்படையில் உரவிநியோகம் வழங்கப்படும் எனவும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கூறினார்.