வேட்புமனு கையளிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு

by Staff Writer 17-03-2020 | 12:08 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கையளிப்பதற்காக, மண்டபத்திற்கு வருகைதரும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தபட்டுள்ளது. இதற்கமைய 3 பிரதிநிதிகள் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தவிர, வேட்புமனுவை கையளிக்கும் நபருடன் மேலுமொருவர் மாத்திரம் மண்டபத்திற்கு வருகை தருவதும் சிறந்ததாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, நாளை மற்றும் நாளை மறுதினமும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதன்பிரகாரம், குறித்த காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் பிரகாரம் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் அறிவுறுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 3 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையினால், பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை கையளிக்கும் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகளுக்காக மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலகம் ஆகிய திறக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார். மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலகம் ஆகியவற்றில் இன்று வழமைபோன்று சேவைகள் இடம்பெறும், இதனால் வேட்புமனுக்களை கையளிப்பதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது, இதனால் அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயேட்சைக்குழு தலைவர்களிடமும் வேண்டுகோளொன்றை விடுக்கின்றோம், ஏற்கனவே அறிவித்தவாறு இன்றும் நாளையும் மற்றும் நாளை மறுதினம் 12 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல் ​செய்ய முடியும் என ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கூறியுள்ளார்.