தென்னாபிரிக்காவில் விளையாட்டுப் போட்டிகள் இரத்து

தென்னாபிரிக்காவில் விளையாட்டுப் போட்டிகள் இடைநிறுத்தம்

by Staff Writer 17-03-2020 | 8:22 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸின் பாதிப்புக்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் 60 நாட்களுக்கு தென்னாபிரிக்காவில் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அறிவிப்பிற்கு இணங்க, தென்னாபிரிக்க கால்பந்தாட்ட சங்கமும் கிரிக்கெட் நிறுவனமும் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன. ஜனாதிபதி சிரில் ரமபோசா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸை தென்னாபிரிக்காவில் தேசிய பேரிடராக பிரகடனம் செய்தார். இந்த பின்புலத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்குடன் தென்னாபிரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதுடன், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதை மட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்பிரகாரம் தென்னாபிரிக்காவில் எதிர்வரும் 60 நாட்களுக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையும் தென்னாபிரிக்க கால்பந்தாட்ட சங்கமும் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. கானா மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகளில் சகல விளையாட்டு போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, சர்வதேசத்தின் பல பாகங்களில் சில விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்களது பங்குபற்றுதலின்றி நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.