இன்று முதல் 3 நாட்களுக்கு பொது விடுமுறை

இன்று முதல் 3 நாட்களுக்கு பொது விடுமுறை

by Staff Writer 17-03-2020 | 6:52 AM
Colombo (News 1st) இன்று (17) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு விசேட அரச விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகள், வங்கிகள், மாவட்ட செயலாளர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஆகியன தவிர்ந்த ஏனைய அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த விசேட விடுமுறை அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையான 3 நாட்களுக்கு விசேட அரசாங்க விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை தனியார் துறையினருக்கும் வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பான அபாயம் குறித்து ஆராய்ந்து, இந்த விடுமுறையை மேலும் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நேற்றைய தினம் அரசாங்க, வர்த்தக, வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.