இலங்கை மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

வுஹான் நகரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 14-03-2020 | 9:05 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸை எதிர்கொள்வது தொடர்பில் சார்க் அமைப்பு கவனம் செலுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பில் பதிவிட்டுள்ள ட்விட்டர் தகவலுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ட்விட்டர் பதிவின் ஊடாக பதிலளித்துள்ளார். இந்திய பிரதமரின் இந்த சிறந்த ஆரம்பத்தினை வரவேற்றுள்ள ஜனாதிபதி, அது தொடர்பான கலந்துரையாடலொன்றை நடத்த தயாராகவுள்ளதாக தனது ட்விட்டர் தகவலில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வுஹான் நகரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். மரணத்தை எதிர்நோக்கியிருந்த 33 இலங்கை மாணவர்களையும் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதி எடுத்த தீர்மானம் தொடர்பில், நன்றி தெரிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், வேறு நாடுகளில் இருந்து வருகை தரும் இலங்கையர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் போது, அவர்களால் முன்வைக்கப்படும் வேண்டுகோள்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் வருத்தமளிப்பதாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் மாணவர்கள் கூறியுள்ளனர்.