by Staff Writer 14-03-2020 | 4:40 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் போலந்து நாட்டு பிரஜைகள் 4 பேர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிற்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த குறித்த 4 பேரிடமும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதாக விமான நிலையத்தின் சுகாதார மருத்துவப் பிரிவினர் குறிப்பிட்டனர்.
இதன் காரணமாக நான்கு போலந்து பிரஜைகளும் IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போலந்து பிரஜைகள் நாட்டில் தங்கியிருந்த இடங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருவோரை தனிமைப்படுத்துவதற்காக மூன்று பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
வவுனியா பம்பைமடு, கந்தகாடு மற்றும் Batticaloa Campus ஆகிய கண்காணிப்பு பிரிவுகளில் 1720 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 103 பேர் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வௌிநாட்டு பிரஜை உள்ளிட்ட 7 பேருக்கு நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இதேவேளை, வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ள 4794 பேர் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
தரவுகள் சேகரிக்கப்படுவோரில் 3035 இலங்கையர்களும், 1153 சீன பிரஜைகளும் அடங்குகின்றனர்.
கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகளை அரச வைத்தியசாலைகளில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், கராப்பிட்டிய, அநுராதபுரம் ஆகிய போதனா வைத்தியசாலைகளில் மாத்திரமே இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.