இந்தியாவில் கொரோனாவால் முதலாவது உயிரிழப்பு பதிவு

இந்தியாவில் கொரோனாவால் முதலாவது உயிரிழப்பு பதிவு

by Bella Dalima 13-03-2020 | 4:22 PM
Colombo (News 1st) இந்தியாவில் கொரோனாவால் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த 76 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 62 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தலைநகர் டெல்லியில் பாடசாலைகள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கருத்திற்கொண்டு உலகளாவிய ரீதியில் பல நாடுகளும் பாடசாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களை மூடியுள்ளன. இதனிடையே, இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது. உலகளாவிய ரீதியில் 4000-இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் , 1,25,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.