மட்டக்களப்பில் ஹர்த்தால்

கொரோனா கண்காணிப்பு நிலையங்களுக்கு எதிர்ப்பு: மட்டக்களப்பில் ஹர்த்தால் 

by Staff Writer 12-03-2020 | 7:33 PM
Colombo (News 1st) மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன், சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. மட்டக்களப்பு நகரம், செங்கலடி , ஏறாவூர், மயிலம்பாவௌி, தன்னாமுனை, காத்தான்குடி, ஆரையம்பதி உள்ளிட்ட இடங்களில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அப்பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்ததுடன், பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகக் குறைவாக இருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை, மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கிரான் விவேகானந்தா வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிரான் பால் சேகரிப்பு நிலையத்தில் இருந்து பாடசாலை வரை பேரணியாக சென்று பின்னர் பாடசாலைக்கு முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணித்தியாலயம் வரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.