கொரோனா அச்சுறுத்தல்: உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் - வைத்தியர் அனில் ஜாசிங்க

by Staff Writer 12-03-2020 | 11:43 AM
Colombo (News 1st) சமூக வலைத்தளங்கள், கையடக்கத்தொலைபேசி ஊடாக இலங்கையின் கொரோனா நிலை தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் பகிரப்படுகின்றன. இவ்வாறான நிலையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதால், பொறுப்பு வாய்ந்த துறையினரால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகின்றது. நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. மக்களின் சில ஊகங்களால் உண்மையான விடயங்கள் மறைக்கப்படக்கூடும் என, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இன்று (12) முதல் நாளாந்தம் ஊடக அறிக்கையை வௌியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளியின் மகனுக்கும் Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல்களின் எவ்வித உண்மையும் கிடையாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். குறித்த நோயாளியின் குடும்பத்தினரால் பாரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் அதனால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். குடும்பத்தினருக்கு தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவரின் மகன், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயில்வதால் இன்று காலை தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.