இலங்கையில் இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 

by Staff Writer 12-03-2020 | 5:38 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நபருடன் வசித்த மற்றுமொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தற்போது அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளருடன் தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். 44 வயதான குறித்த நபர் தற்போது அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். மேலும், தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற கொரோனா நோயாளியின் குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் இதுவரை தொற்று உறுதிசெய்யப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறினார். இந்நிலையில், சமூக வலைத்தளங்கள், கையடக்கத்தொலைபேசி ஊடாக இலங்கையின் கொரோனா நிலை தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் பகிரப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதால், பொறுப்பு வாய்ந்த துறையினரால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் சில ஊகங்களால் உண்மையான விடயங்கள் மறைக்கப்படக்கூடும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 30 பேர் அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். இதேவேளை, வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் இலங்கையர்கள் மற்றும் வௌிநாட்டவர்கள், மூன்று கண்காணிப்பு மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.