வௌ்ளவத்தை - பத்தரமுல்லை இடையிலான புதிய படகு சேவை

வௌ்ளவத்தை - பத்தரமுல்லை இடையிலான படகு சேவை இன்று ஆரம்பம்

by Staff Writer 11-03-2020 | 7:33 AM
Colombo (News 1st) வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லை வரையான பயணிகள் படகு சேவை இன்று (11) ஆரம்பமாகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. கொழும்பு நகரத்தில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படுகிறது. அத்துடன், பத்தரமுல்ல பகுதியிலேயே பெரும்பாலான அரச நிறுவனங்கள் இயங்குவதால் அங்கு செல்லும் மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த படகு சேவையின் ஊடாக வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லைக்கு 30 நிமிடத்தில் செல்ல முடியும் என காணி நிரப்பல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. படகு சேவை கட்டணமாக 60 ரூபா அறவிடப்படவுள்ளது. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு படகு சேவையில் ஈடுபடவுள்ளதுடன், படகொன்றில் 16 பேர் பயணிக்க முடியும் என காணி நிரப்பல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டத்தில், 4 படகுகள் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.