முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குக

பொதுத்தேர்தலில் முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பா.டெனிஸ்வரன் கோரிக்கை

by Staff Writer 11-03-2020 | 3:58 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பத்தை வழங்குமாறு முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயத்தை வலியுறுத்தும் வகையில் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பா.டெனிஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அரசியல் ரீதியாக சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அப்போதிருந்த தமிழ் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்ததாக அவர் தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார். இதன் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் எத்தகைய பிளவு ஏற்பட்டாலும் மக்கள் ஆதரவளித்து வருதாக முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டம் இதுவரை உருவாக்கப்படாமை பாரிய குறையாகும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் முன்னாள் போராளிகள் மேடைகளில் பேசுபொருளாக இருந்தாலும் தேர்தலின் பின்னர் அவர்கள் கைவிடப்படுவதாக பா.டெனிஸ்வரனின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபை என்பவற்றுக்கு உரிய ஆசன ஒதுக்கீட்டின் ஊடாக புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.