அவன்ற்கார்ட் வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்

அவன்ற் கார்ட் வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும்: நீதிமன்றம் தீர்ப்பு

by Staff Writer 11-03-2020 | 6:20 PM
Colombo (News 1st) அவன்ற் கார்ட் சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற மேஜர் நிஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பிரதிவாதிகள் சமர்ப்பித்த அடிப்படை ஆட்சேபனை மனுவை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷம்பா ஜானகி ராஜரத்ன, எதிர்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி முதல் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்து உத்தரவிட்டார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவரினதும் எழுத்துமூல அனுமதியின்றி தமது தரப்பினருக்கு எதிராக ஆணைக்குழு வழக்கை தொடர்ந்துள்ளதால், வழக்கை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாது என பிரதிவாதிகள் அடிப்படை ஆட்சேபனை மனு தாக்கல் செய்திருந்தனர். ஆணைக்குழுவின் எழுத்துமூல அனுமதி பெறப்பட்டிருந்தால், ஆணையாளர்கள் மூவரினதும் கையொப்பம் இல்லாவிட்டாலும் வழக்கு விசாரணைகளை தொடர்வதற்கான இயலுமை உள்ளதாக குறித்த அடிப்படை ஆட்சேபனை தொடர்பில் தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அவன்ற் கார்ட் மெரிடைம் சர்விசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக, அந்த நிறுவனத்திடமிருந்து 355 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை மற்றும் அதனை பகிர்ந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.