மலையக பிரதிநிதிகள் வடக்கில் வேட்பாளர்களாக வேண்டும்

மலையக பிரதிநிதிகள் வடக்கில் வேட்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்தல்

by Staff Writer 10-03-2020 | 8:26 PM
Colombo (News 1st) மலையக மக்களுக்கு வடக்கில் வழங்கப்படும் வாய்ப்புக்கள் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விமர்சித்துள்ளார். இம்முறை பொதுத்தேர்தலில் மலையக பிரதிநிதிகளும் வடக்கில் வேட்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் தெரிவித்தார். மனோ கணேசன் தெரிவித்ததாவது,
தமிழ் முற்போக்கு கூட்டணியில் நாங்கள் போட்டியிடும் போது, கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் நானாக இருக்கின்றேன். என்னோடு சேர்ந்து இன்னொருவர் போட்டியிடுவார். நிச்சயமாக வட, கிழக்கை சேர்ந்த ஒருவரைத் தான் நாங்கள் போட்டியிட வைப்பது சம்பிரதாயம். அதே மாதிரியானவொரு சந்தர்ப்பத்தை TNA வடக்கிலே கடைப்பிடிக்கவில்லை என்பது பெரிய குறைபாடாக இருக்கின்றது. இந்த முறை தான் நண்பர் சுமந்திரனிடம் நான் சொன்னேன் தயவு செய்து வன்னி மாவட்டத்தில் உங்களது பட்டியலில் தெற்கில் இருந்து சென்று குடியேறிய மலையக உரிமையைக் கொண்ட ஒருவரை தேடிப்பிடித்து அவரை உங்கள் வேட்பாளர் பட்டியலில் நிச்சயமாக நிறுத்த வேண்டும் என்று. அவரும் அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார் என்று நான் நினைக்கின்றேன். பொறுத்திருந்து பார்ப்போம். வட, கிழக்கிலே குறிப்பாக வடக்கிலே வன்னி பிராந்தியத்தில் மலையகத் தமிழர்களை மாற்றானாக பூர்வீக மக்கள் கருதுகின்றார்களா என்ற சந்தேகம் மனங்களில் பாரியளவில் உருவாகியிருப்பதை நான் அப்பட்டமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.