by Staff Writer 10-03-2020 | 9:29 AM
Colombo (News 1st) பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெறும் பஸ் விபத்துக்களில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பல்வேறுபட்ட நோய் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளமையால் ஏற்படுகின்றமை தெரியவந்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.
இந்த நிலமையை கருத்திற்கொண்டு இவர்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த வைத்திய பரிசோதனை முகாம் இன்று (10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கொழும்பில் உள்ள பிரதான தனியார் பஸ் நிலைய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த மருத்துவ பரிசோதனையில் அனைத்து பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களும் பங்குபற்ற வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா மேலும் கூறியுள்ளார்.
இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பொலிஸார் மற்றும் போக்குவரத்து வைத்திய நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து இந்த வைத்திய பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளன.