கொரோனா: கட்டுப்பாடுகளை அதிகரித்தது இத்தாலி

இத்தாலியில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விஸ்தரிப்பு

by Chandrasekaram Chandravadani 10-03-2020 | 8:22 AM
Colombo (News 1st) ​கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் இத்தாலி விஸ்தரித்துள்ளது. அதனடிப்படையில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு நாடளாவிய ரீதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிக்குச் செல்வது மற்றும் குடும்பத்தின் அவசரநிலைகளின் ​போதும் மாத்திரமே மக்கள் பிரயாணம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய பிரதமர் யூசேப்பே கொண்டே (Giuseppe Conte) தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது இன்றைய தினத்திலிருந்து அமுலுக்கு வருவதுடன், இதன்மூலம் பொதுமக்களைக் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தாலியில் கொரோனாவினால் நேற்றைய தினம் 97 பேர் உயிரிழந்துள்ளதுடன், மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 463 ஆக உயர்வடைந்துள்ளது. இதன்மூலம் சீனாவிற்கு வௌியே அதிக மரணங்கள் நிகழ்ந்த நாடாக இத்தாலி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7,375 இலிருந்து 9,172 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியின் 20 பிராந்தியங்களிலுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஈரானில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 43 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், மொத்தமாக 237 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாகவும், நாடு முழுவதும் 7,161 கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் உலகம் முழுவதிலும் 3,890 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், 111,000 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.