அல்-ஷபாப் அமைப்பின் சிரேஷ்ட தளபதி உயிரிழப்பு

வான் தாக்குதலில் அல்-ஷபாப் அமைப்பின் சிரேஷ்ட தளபதி உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 09-03-2020 | 4:27 PM
Colombo (News 1st) சோமாலியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அந்நாட்டில் இயங்கும் அல்-ஷபாப் அமைப்பின் சிரேஷ்ட தளபதி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியா - அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கையில் கடந்த 22 ஆம் திகதி தெற்கு சோமாலிய நகரமான சாகோவில் கோர்காப் கொல்லப்பட்டதாக சோமாலிய அரச வானொலி அறிவித்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் வெளியாவதற்கு ஏற்பட்ட காலதாமதம் குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. சிரேஷ்ட தளபதியான பஷீர் மொஹமட் கோர்காப் (Bashir Mohamed Qorgab) இருக்கும் இடம் குறித்த தகவலை வழங்கியவருக்கு 2008 ஆம் ஆண்டு 5 மில்லியன் டொலர் வெகுமதியை அமெரிக்கா வழங்கியது. சோமாலியாவில் உள்ள போராளிகள் குழுவை இலக்குவைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக வான் தாக்குதல் நடத்திவருகின்றது. எனினும், இந்த சம்பவம் குறித்து எவ்வித தகவலையும் அமெரிக்கா வழங்கவில்லை. இந்தநிலையில், கோர்காபின் மரணத்தை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் பணிகளை முன்னின்று செயற்படுத்தி வந்த இவர் கென்யாவிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.