கொரோனா கண்காணிப்பு இன்று மாலை முதல் ஆரம்பம்

கொரோனா கண்காணிப்பு இன்று மாலை முதல் ஆரம்பம்

by Fazlullah Mubarak 09-03-2020 | 2:38 PM

Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவும் நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகளை கண்காணிப்புக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று (09) மாலை முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகள் இவ்வாறு கண்காணிக்கப்படவுள்ளனர். மட்டக்களப்பு - Batticaloa Campus மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலும் இவர்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளனர். குறித்த மத்திய நிலையங்களில் உள்வாங்கப்படும் நோயாளர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படவுள்ளனர். இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஏனைய நாடுகளிலிருந்து வருகைதந்துள்ள சுமார் 4000 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறியுள்ளார். நாட்டை வந்த குறித்த நபர்கள் தங்கியுள்ள பகுதிகளின் பொது சுகாதார பரிசோதகர்கள், அவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்வதாக வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.