இன்று சில விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு

இன்றைய சில விபத்துக்களில் 10 பேர் பலி ; 20 பேர் காயம்

by Fazlullah Mubarak 09-03-2020 | 2:46 PM

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

கதிர்காமம் நோக்கி பயணித்த வேனொன்று லுணுகம்​வெஹர, 22 ஆம் சந்தியில் விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். காலியை சேர்ந்தவர்களே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, யாழ் - கண்டி, ஏ-9 வீதியின் திரப்பனை பகுதியில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் பஸ்ஸொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். பதுளை, தல்தென 9 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். பஸ்ஸொன்றும் பௌசரொன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நபடவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை - கெக்கிராவ வீதியின் கித்துல்ஹிட்டியாவ பகுதியில் லொறியொன்று, வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி, வேன் மற்றும் மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார். காலி - மாத்தறை பிரதான வீதியின் கல்கெட்டிய பகுதியில் முச்சக்கரவண்டியொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.