45,585 பேருக்கு அரச உத்தியோகம்

45,585 பேருக்கு அரச உத்தியோகம்: நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

by Staff Writer 07-03-2020 | 4:25 PM
Colombo (News 1st) தொழிலுக்கான தகைமையைப் பெற்றுள்ள அனைவருக்கும் நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தகைமை பெற்றுள்ள அனைவரினதும் பெயர் விபரங்கள் மார்ச் மாதம் 11ஆம் திகதி பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளன. நியமனக் கடிதங்கள் கிடைப்பதற்கு தாமதமாகுமாயின் அதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளவர்கள் பிரதேச செயலாளருக்கு அது குறித்து அறிக்கையிட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கேற்ப பொதுத்தேர்தல் நடைபெற்று ஐந்து தினங்களுக்குப் பின்னர் பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கிடைத்த விண்ணப்பங்களில் 45,585 பேர் அரச நியமனத்திற்காக தகைமை பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.