கைதான 28 வௌிநாட்டு பிரஜைகளுக்கும் தடுப்புக்காவல் 

போதைப்பொருட்களுடன் கைதான 28 வௌிநாட்டு பிரஜைகளையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 06-03-2020 | 4:47 PM
Colombo (News 1st) தென் கடல் பிராந்தியத்தில் ஹெரோயின், ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட வௌிநாட்டு பிரஜைகள் 28 பேரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை தடுப்புக்காவலில் வைப்பதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபர்களை இன்று ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாட்டு பிரஜைகளே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் தென் கடற்பிராந்தியத்திலும், சர்வதேச கடல் எல்லையிலும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது, 400 கிலோகிராம் ஹெரோயின், 100 கிலோகிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் 6000 மில்லியன் ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.