தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் யார்?

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனா? சுரேஷ் பிரேமச்சந்திரனா?

by Staff Writer 06-03-2020 | 8:32 PM
Colombo (News 1st) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக மாற்றம் செய்த போதிலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் பதவிகள் மாற்றப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் மற்றும் செயலாளராக செயற்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார். இதேவேளை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் பதவியை மாற்றுவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவராக தனது பெயரை மாற்றுவதற்கான அனைத்து ஆவணங்களையும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கூட்டணியின் தலைவராக தனது பெயரை மாற்றுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்ததாகவும், எனினும் எப்போது பெயர் மாற்றப்படும் என்பதை உறுதியாகக் கூற முடியாது எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவராக தானே செயற்படவுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் தெரிவித்திருந்தார். அத்துடன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடக அறிக்கைகளிலும் கூட்டணியின் தலைவராக சி.வி.விக்னேஸ்வரனின் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.