தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு மீன் சின்னம்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு மீன் சின்னம் அறிவிப்பு

by Staff Writer 06-03-2020 | 7:36 PM
Colombo (News 1st) தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னமாக மீன் சின்னத்தினை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. EPRLF எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை புதிய கட்சியாக பதிவு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கூட்டணி எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கும் நோக்கில் EPRLF கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. EPRLF கட்சியின் சின்னமான மலர் சின்னத்திற்கு பதிலாக பொங்கல் பானை, நிறைகுடம் சின்னங்களை மாற்றுவதற்கான கோரிக்கை கட்சியால் தேசிய ​தேர்ல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த இரண்டு சின்னங்களும் நிராகரிக்கப்பட்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னமாக மீன் சின்னம் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார். நிராகரிக்கப்பட்ட இரண்டு சின்னங்களும் கலாசார மரபினை பிரதிபலிப்பதால், அவற்றை கட்சி சின்னங்களாக வழங்காது நிராகரித்ததாக அவர் கூறினார். இதேவேளை, அருண் தம்பி முத்து தலைமையிலான மக்கள் முன்னேற்றக் கட்சியின் சின்னமாக சுறா மீன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் முன்னேற்றக் கட்சி பதிவிற்கு விண்ணப்பித்துள்ளமை தொடர்பில் தான் அறியவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார்.