சிரிய போரை நிறுத்த ரஷ்யா, துருக்கி தீர்மானம் 

சிரிய போரை நிறுத்த ரஷ்யா, துருக்கி தீர்மானம் 

by Bella Dalima 06-03-2020 | 5:30 PM
Colombo (News 1st) சிரியாவில் நடைபெற்று வரும் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோர் தீர்மானித்துள்ளனர். சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கிளர்ச்சியாளர் குழுக்கள் மீது ரஷ்யாவின் உதவியுடன் சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவளித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் போரில் சிரியா மற்றும் துருக்கி என இரு தரப்பிலும் 50-க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சண்டையில் சிரிய படைகளுக்கு ஆதரவு அளிக்கும் ரஷ்யா, கிளர்ச்சியாளர்களையும் துருக்கி படைகளையும் குறிவைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இந்நிலையில், இட்லிப் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் மாஸ்கோவில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இட்லிப் மாகாணத்தில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த இரு நாடுகளுக்கு இடையேயும் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி இன்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வருகிறது.