ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு பிடியாணை

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு பிடியாணை

by Staff Writer 06-03-2020 | 4:54 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள். கே. வீரசிங்கவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் இன்று ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் ஆஜராகாமையினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமை குறித்து மன்றுக்கு அறிவிக்காமையினால் அதனை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகத் தீர்மானித்து விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. அலி ரொஷான் எனப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. அது தொடர்பான ஆவணங்கள் குறித்து சாட்சியமளிப்பதற்கு இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.