by Staff Writer 04-03-2020 | 7:25 PM
Colombo (News 1st) அக்கரைப்பத்தனை - டொரிங்டன் வனப்பகுதியில் நேற்று (03) பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
டொரிங்டன் வனப்பகுதியில் நேற்று பிற்பகல் தீ பரவியது. தீ காரணமாக 18 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரையாகியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
பொதுமக்கள் மற்றும் அக்கரைப்பத்தனை பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால், ஹட்டன் நகருக்கான நீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சிங்கமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதால் இங்குள்ள நீரேந்து பிரதேசம் வற்றிப்போயுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தற்போது காணப்படும் நீரின் அளவு, குடிநீர் தேவைக்கு போதுமானதாக இல்லையென்பதால், ஹட்டன் - டிக்கோயா இன்வரி பகுதியிலிருந்து பெறப்படும் நீரை இரு நாட்களுக்கு ஒரு தடவை 5 மணித்தியாலங்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது வனப்பகுதிகளில் தீ வைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 129 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
தீ வைக்கப்படும் சம்பவங்களால் நாட்டின் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், வனப்பகுதிகளில் தீ வைக்கும் நபர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக பிரதீப் கொடிப்பிலி கூறினார்.