தபால் வாக்களிப்பிற்கான விண்ணப்பம் 9ஆம் திகதி முதல்

தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் 9ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன

by Staff Writer 04-03-2020 | 7:30 AM
Colombo (News 1st) பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு கோரப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடவுள்ளது. 2019 வாக்காளர் இடாப்பு இம்முறை பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதன்பிரகாரம் 162,63,885 பேர் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் வாக்களிப்பதற்கு அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 17,85,964 வாக்காளர் உள்ளனர். நாட்டில் குறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2,87,024 வாக்காளர்கள் உள்ளனர்.

ஏனைய செய்திகள்