பாராளுமன்றம் கலைப்பு ; ஏப்ரல் 25இல் பொதுத் தேர்தல்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது ; பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி

by Staff Writer 03-03-2020 | 6:51 AM
Colombo (News 1st) எட்டாவது பாராளுமன்றம் நேற்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன், பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கான அழைப்பை விடும் அதிவிசேட வர்த்தமானி நேற்றிரவு வௌியிடப்பட்டது. இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இம்மாதம் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனு கோரப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடவுள்ளது. இதேவேளை, பாராளுமன்றம் கலைக்கப்படும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்ட நிலையில், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் இடம் ஆகியன தொடர்பில் இன்று வர்த்தமானி வௌியிடப்படவுள்ளது. தாம், வாக்களிக்கும் மத்திய நிலையங்களில் வாக்களிப்பதற்கு ஏதேனும், அச்சுறுத்தல் காணப்படுமாயின் குறித்த நபர்களுக்கு வேறு இடங்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பிலும் இன்று வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.