by Staff Writer 03-03-2020 | 6:13 PM
Colombo (News 1st) கொலன்னாவை நகர சபையின் முன்னாள் தலைவர் ரவிந்திர உதயசாந்த தொடம்பே கமகே என்பவரை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
முறைப்பாடு ஒன்று தொடர்பில் சாட்சியமளிப்பதற்கு இன்று மன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் ஆஜராகாமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் இன்று சாட்சி விசாரணை இடம்பெற்றது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று இந்த சாட்சி விசாரணை இடம்பெற்றது.
வழக்கின் 13 ஆவது சாட்சியாளராக ரவிந்திர உதயசாந்த தொடம்பே கமகே பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று மன்றில் ஆஜராகாமையால் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி வரை சாட்சி விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.