ஏவுகணை பரிசோதனையில் அசராத வட கொரியா

ஏவுகணை பரிசோதனையில் அசராத வட கொரியா

by Chandrasekaram Chandravadani 03-03-2020 | 10:38 AM
Colombo (News 1st) இனங்காணப்படாத ஏவுகணைகள் இரண்டை வட கொரியா பரீட்சித்துள்ளதாக தென் கொரிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு வட கொரியா நடத்திய முதலாவது ஆயுதப் பரிசோதனையாக இது பதிவாகியுள்ளது. நாட்டின் வட கிழக்கு கடலிலிருந்து, ஜப்பான் கடலை நோக்கி இந்த ஏவுகணை செலுத்திப் பரீட்சிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அடையாளம் காணப்படாதபோதிலும், குறுந்தூர பலிஸ்டிக் (ballistic) ஏவுகணையாக இருக்கலாம் எனத் தாம் நம்புவதாக தென் கொரிய படைகளின் இணைப்பிரதானிகள் தெரிவித்துள்ளனர். 18 மாத இடைவௌியின் பின்னர் கடந்த ஆண்டு மே மாதத்தில், ஏவுகணைப் பரிசோதனைகளை வட கொரியா ஆரம்பித்திருந்ததுடன், அதன்பின்னர் தொடர்ச்சியாக பல பரிசோதனைகளை நடத்தியிருந்தது. அமெரிக்க - வட கொரிய ஜனாதிபதிகளுக்கு இடையே சிங்கப்பூரில் நடைபெற்ற முதலாம்கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வட கொரியா தமது ஏவுகணைப் பரிசோதனைகளை 18 மாதங்கள் நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமது இணைந்த இராணுவப்பயிற்சியை பிற்போடுவதாக அமெரிக்காவும் தென் கொரியாவும் அறிவித்ததைத் தொடர்ந்தே இந்த ஏவுகணைப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.