பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையால் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க முடியுமா: மஹிந்த தேசப்பிரிய விளக்கம்

by Staff Writer 03-03-2020 | 9:34 PM
Colombo (News 1st) பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையினால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதியில் இருந்து 1000 ரூபா சம்பளம் வழங்க முடியுமா? இது தொடர்பில் கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. கடந்த அரசாங்க காலத்திலும் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி புறக்கோட்டையிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வருடங்களில் அதனை வழங்குவதாக ஐந்து தடவைகளுக்கும் மேல் உறுதி வழங்கியிருப்பார்கள். அவர்களின் மார்ச் மாத சம்பளம் ஏப்ரல் மாதமே கிடைக்கும். அதனை உறுதியாக தீர்மானித்து இருந்தால், அதனால் எவரும் அரசியல் இலாபம் பெறாவிட்டால், என்னால் அது குறித்து உறுதியாக எதனையும் கூற முடியாது. அவ்வாறான கோரிக்கை தொடர்பில் ஆணைக்குழு ஆராயும். நான் தனியாக தேர்தல் ஆணையாளராக இருந்தால் உடனடியாக பதிலளித்து இருப்பேன். தற்போது மூன்று பேர் இருப்பதனால், கலந்துரையாடியே அதற்கு பதிலளிக்க வேண்டும்