துருக்கிய வான் தாக்குதலில் சிரிய படையினர் பலி

துருக்கிய வான் தாக்குதலில் சிரிய படையினர் 19 பேர் பலி

by Chandrasekaram Chandravadani 02-03-2020 | 3:16 PM
Colombo (News 1st) சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் துருக்கி நடத்திய Drone தாக்குதலில் 19 சிரியப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இட்லிப் பிராந்தியத்தில் வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில், சிரிய இராணுவத் தொடரணி ஒன்றையும் இராணுவத்தளம் ஒன்றையும் இலக்குவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சிரிய போர் விமானங்கள் 2 துருக்கியால் நேற்றைய தினம் தாக்கி வீழ்த்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், சிரியாவிற்கு பாரிய ஆதரவை வழங்கிவரும் ரஷ்யா, துருக்கிக்கு பாரிய எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரிய வான்பரப்பில் பயணிக்கும் துருக்கிய விமானங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லை என ரஷ்யா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.