ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இலங்கை

ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இலங்கை

by Staff Writer 02-03-2020 | 8:01 AM
Colombo (News 1st) மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை இலங்கை அணி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. கண்டி பல்லேகலையில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா ஆகியோர் தலா 44 ஓட்டங்களை பெற்றனர். குசல் மென்டிஸ் 55 ஓட்டங்களுடன் வெளியேறினார். தனஞ்சய டி சில்வா மற்றும் திஸ்ஸர பெரேரா ஜோடி ஆறாவது விக்கெட்டில் 65 ஓட்டங்களை பகிர்ந்தது. தனஞ்சய டி சில்வா 47 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்றார். திஸ்ஸர பெரேரா 38 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணி 50 ஓவர்களில் 307 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. அல்சாரி ஜோசப் 4 விக்கெட்களை வீழ்த்தினார். வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் சார்பாக ஷேய் ஹோப் சுனில் அம்ரிஸ் ஜோடி முதல் விக்கெட்டில் 111 ஓட்டங்களை பகிர்ந்தது. சுனில் அம்ரிஸ் 60 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். ஷேய் ஹோப் 72 ஓட்டங்களை பெற்று வெளியேறினார். கீரன் பொலார்ட் 49 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பெபியன் எலன் 15 பந்துகளில் 37 ஓட்டங்களை விளாசி வெற்றிக்காக போராடினார். மேற்கிந்தியதீவுகளின் வெற்றிக்கு கடைசி பந்தில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை சிறப்பாக வீசிய முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் வெற்றிக்கு வித்திட்டார். போட்டியில் ஏஞ்சலோ மெத்தியூஸ் 4 விக்கெட்களை வீழ்த்தியதோடு போட்டியின் சிறப்பாட்டகாரருக்கான விருதையும் பெற்றார்.