இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு ஜெனிவாவில் கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

by Staff Writer 29-02-2020 | 8:03 PM
​Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வின் உபகுழுக் கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (28) உரையாற்றினார். அவரது உரை... 30/1 தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து இந்த வாய்மொழி மூல அறிக்கை மதிப்பீட்டை மேற்கொண்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 பிரேரணை பேரவையின் உறுப்பு நாடுகளால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்தப் பிரேரணையின் உள்ளடக்கமானது மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்ற விடயங்களில், இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளோடு ஒப்பிடுகையில் மிகப்பாரிய குறைகளோடு இருந்தமையால், தமிழர்களால் இப்பிரேரணையானது சந்தேகத்துக்குரியதாகவே பார்க்கப்பட்டது. இந்த 30/1 பிரேரணையானது, சர்வதேச கலப்பு குற்றவியல் பொறிமுறையைக் கொண்டிருக்கும் என்று, தமிழர்களுக்குக் கூறப்பட்டபோதிலும் அதற்கு மாறாக, பொறுப்புக்கூறலை உள்ளக விசாரணைக்குள் மட்டுப்படுத்தக்கூடிய வகையில் மிக சாமர்த்தியமான வார்த்தைகள் மூலம் அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது என்பதை எமது அமைப்பு இங்கே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த பிரேரணையை அமுல்படுத்த முடியாது என அப்போதைய அரசாங்கம் வெளிப்படையாகவே மறுதலித்திருந்த போதிலும், தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் கால நீடிப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த நவம்பரில் இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த புதிய அரசாங்கமானது , எதிர்பார்க்கப்பட்டவாறே, 30/1 பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக பேரவைக்கு அறிவித்திருப்பதன் மூலம் இந்த பிரேரணையை நிராகரித்திருக்கின்றது. நீதியை நிலைநாட்ட மறுதலிக்கின்ற நாடொன்றில், குற்றவியல் நீதியை அமுல்படுத்துவதற்கான வல்லமைகள் இந்த மனித உரிமை பேரவைக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது என்பதை ஏற்று, இப்போதேனும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பிரேரிப்பதற்கு அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கை விடுக்கப்பட வேண்டும்.