CCTV கெமராக்கள் சேதம்: 16 மாணவர்கள் கைது

களனி பல்கலைக்கழக CCTV கெமராக்கள் சேதம்: 16 மாணவர்கள் கைது

by Staff Writer 27-02-2020 | 6:21 PM
Colombo (News 1st) களனி பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமரா கட்டமைப்பை சேதப்படுத்தியமை தொடர்பில் 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய பின்னர் மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. CCTV கெமரா கட்டமைப்பை சேதப்படுத்தியமையால் 2.3 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் ஊடகப் பணிப்பாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயாநந்த ரூபசிங்க குறிப்பிட்டார். 19 CCTV கெமராக்களை மாணவர்கள் சேதப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். சம்பவம் தொடர்பில் இதுவரை 40 மாணவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயாநந்த ரூபசிங்க கூறினார். கெமரா கட்டமைப்பை சேதப்படுத்தியவர்கள் தொடர்பில், பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்