by Staff Writer 27-02-2020 | 1:45 PM
Colombo (News 1st) சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் குரல் பதிவுகள் சந்தேக நபர்களின் மாதிரிகளுடன் ஒத்துள்ளதாக அரச இராசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு பிரதான நீதவானுக்கு அறிவித்துள்ளார்.
வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேக நபர்களாக சரத்குமார மற்றும் அதுலகுமார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
வேறு ஒரு வழக்கு தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இதன் பிரகாரம் சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு மகர சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் சந்தேக நபர்கள் இருவரும் சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பில் கலந்துகொள்வதற்கு முன்னர் போலி தாடியுடன் ராஜித சேனாரத்னவின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட மலிக் விஜேநாயக்கவிடம் 15,000 ரூபா பெற்றுக்கொண்டமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு பிரதம நீதவானுக்கு அறிவித்துள்ளார்.