அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்திற்கான நேர்முகத் தேர்வு ஆரம்பம்

by Staff Writer 26-02-2020 | 8:21 PM
Colombo (News 1st) ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்திற்கான நேர்முகத் தேர்வு இன்று ஆரம்பமானது. செழிப்பான பார்வை என்ற கொள்கைக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகங்களில் இந்த நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றன. தொழில்வாய்ப்பை எதிர்பார்த்து இளைஞர், யுவதிகள் பிரதேச செயலகங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த நேர்முகத்தேர்வு இன்று முதல் நான்கு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்கான நேர்முகத் தேர்வு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 4 பிரதேச செயலகங்களில் நடைபெறுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் 11,328 பேர் விண்ணப்பித்து அதில் 7957 பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நேர்முகத் தேர்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலகங்களில் நடைபெற்றன இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலும் இன்று நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வு மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. புத்தளம் மாவட்டத்திற்கான நேர்முகத் தேர்வு புத்தளம் மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலகங்களில் நடைபெற்றது ஆறு மாத கால பயிற்சிகளில் முதலில் இவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அவர்களின் சொந்த இடத்தில் நிரந்தர அரச உத்தியோகமொன்றை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.